Published : 28 Apr 2022 07:36 AM
Last Updated : 28 Apr 2022 07:36 AM

திருப்பூர் பின்னலாடை அதிபர் வீட்டில் ரூ.3 கோடி திருட்டு: கட்டிட மேஸ்திரி உட்பட 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை அதிபரின் பழைய குடோன் வீட்டில், மூட்டையில் இருந்த சுமார் ரூ.3 கோடி பணம், நகைகளை திருடிய 4பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மங்கலம் சாலை குள்ளேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (73). பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருகிறார்.

துரைசாமி வசித்து வந்த வீட்டுக்கு எதிரே, அவருக்கு சொந்தமான பழைய குடோன் உள்ளது. இதில் கடந்த ஜனவரி 3-ம் தேதி நகை, லட்சக்கணக்கில் பணம் மற்றும் சொத்துப் பத்திரங்கள் திருட்டுப் போனதாக, திருப்பூர்மத்திய போலீஸாரிடம் துரைசாமிபுகார் அளித்திருந்தார். இவ்வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சதீஷ்(29), இவரது சகோதரர் சக்தி(24) ஆகியோர் துரைசாமியின் பழைய வீட்டின் சுற்றுச்சுவர் சீரமைப்புப் பணிக்காக வந்தபோது, அங்குள்ள அறையில் இருந்த மூட்டையில் கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருப்பதை அறிந்தனர். அதில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிச் சென்றனர்.

எஞ்சியிருந்த பணத்தையும் திருட சகோதரர்கள் இருவரும், வேறொரு பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இடுவாய் பகுதியைச் சேர்ந்த தாமோதரன், ராதாகிருஷ்ணனுடன் இணைந்து திட்டம் தீட்டி திருடியுள்ளனர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து,திருட்டில் ஈடுபட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். திருடுபோனதாக கூறப்படும் ரூ.3 கோடியில் ரூ.16 லட்சம் ரொக்கம், 2 கார்கள், வீட்டின் 4 பத்திரங்கள் ஆகியவற்றை இதுவரை போலீஸார் மீட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x