

சேந்தமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தில் உள்ள அரச மரத்துக் காலனியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அப்போது, இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கல்வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், அரசு மரத்துக் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் படுகாயமடைந்தார். இதை கண்டித்து சேந்தமங்கலம் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே அரச மரத்துக் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அமைதிப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
மேலும், மோதல் தொடர்பாக சாத்தநாயக்கனூரைச் சேர்ந்த தீனா (21), மாதையன் (42), முருகேசன் (42) ஆகியோரை சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.