

திண்டுக்கல்: பாலியல் வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் கல்லூரித் தாளாளர் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி யில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து தாடிக்கொம்பு போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஜோதிமுருகன் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை அழைத்து வந்து தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இவர் ஜாமீன் கோரி திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார், இதில் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஜோதிமுருகனின் ஜாமீனை ரத்து செய்து கீழமை நீதிமன்றத்தில் சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஜோதிமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்து ஜாமீன் கோரினார். ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு சரி என்றும், ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல்லில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மகளிர் நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.