Published : 03 Apr 2022 05:04 AM
Last Updated : 03 Apr 2022 05:04 AM

விருதுநகர் பாலியல் வன்கொடுமை | போலீஸ் காவலில் விசாரிக்கப்படும் 3 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்படும் ஹரிஹரன்.

விருதுநகர்

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் 4 பேரில் 3 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, பிரவீன்ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் மார்ச் 29 முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மருந்துக் கிடங்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடு, ஹரிஹரன், ஜூனத்அகமது, பிரவீன்,மாடசாமி ஆகியோரது வீடுகளிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மாடசாமிக்கு நேற்று முன்தினம் மாலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஜூனத்அகமதுவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அரசு மருத்துவமனை அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் சிகிச்சைமுடிந்து மாடசாமி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜூனத்அகமதுவுக்கு ரத்தக் கொதிப்பு பரிசோதனை, இசிஜி, எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் இவரும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை முடிந்து மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். 2-ம் நாளாக நேற்றும் ஹரிஹரன், மாடசாமி ஆகியோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர்கள் இருவரும் தனித்தனியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x