

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு பொது நல மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
திருப்பத்தூர் அடுத்த கரியம்பட்டி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறோம். எங்கள் கல்லூரியில் மாணவர்கள் தங்கி படிக்க ‘மாணவர்கள் விடுதி’ அமைத்து தர வேண்டும் ’’ என தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி (30) என்பவர் கொடுத்த மனுவில், ‘‘எனது கணவர் சரவணன் பல ஆண்டுகளுக்கு முன்பு சாராய வியாபாரம் செய்து வந்தார். ஆனால், கடந்த 2 ஆண்டு களாக அவர் சாராய தொழில் செய்வதில்லை. கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாணியம் பாடியில் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் எனது கணவர் சரவணனை வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசா ரணைக்காக கடந்த மாதம் 17-ம் தேதி அழைத்துச்சென்றனர்.
வேலைக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் இருந்தவரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்போவதாக கேள்விபட்டு காவல் நிலையம் சென்று கேட்டால், என்னையும் எனது குழந்தைகளையும் கைது செய்வோம் என கிராமிய காவல் துறையினர் மிரட்டுகின்றனர்.
திருந்தி வாழ்பவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாராய வழக்கில் கைது செய்யப் பட்ட எனது கணவரை விடுவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.