

திருவள்ளூர்: பத்து வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 103 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன்(103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி, தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி, தனியாக அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு விசாரணையில் பரசுராமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பைத் திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி நேற்று அளித்தார். அதில், சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த குற்றத்துக்காகப் பரசுராமனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அவர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.45 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரணமாக ரூ.1.50 லட்சம் வழங்கவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.