கூடலூர்: திமுக தொண்டர் கத்தியால் குத்தி படுகொலை; ஒருவர் படுகாயம்

சமீர்
சமீர்
Updated on
1 min read

கூடலூர்:கூடலூர் அருகே திமுக தொண்டர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் 10-ம் வார்டில் அ.தி.மு.க. சார்பில் கணியம்வயலை சேர்ந்த நவுசாத் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பெண் வேட்பாளர் எமிபோல் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டின் முன்பு நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் சமீர்(46), ஷிம்ஜித் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதை தனது கணவர் நவுசாஷ்த்திடம் ஷிம்ஜித் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த நவ்ஷாத், சமீரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது கத்தியை எடுத்து சமீரை குத்தினார். அப்போது அவரை தடுக்க வந்த அஸ்கர் (38) என்பவரையும் நவ்ஷாத் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சமீர் (46) பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து நவ்ஷாத் அங்கிருந்து தப்பி ஓடினார்.

அ.தி.மு.க. வேட்பாளர் கணவருக்கு வலைவீச்சு:

தகவலறிந்த தேவர்சோலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அஸ்கரை மீட்டு கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் உயிரிழந்த சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தேவர்சோலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கிண்டல் செய்ததால் செய்ததால் ஆத்திரத்தில் திமுக தொண்டரை, அதிமுக பெண் வேட்பாளரின் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in