ஆந்திராவுக்கு கடத்த முயன்ற, பதுக்கப்பட்ட 42.5 டன் ரேஷன் அரிசி; 7.5 டன் கோதுமை பறிமுதல்: லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற, பதுக்கப்பட்ட 42.5 டன் ரேஷன் அரிசி; 7.5 டன் கோதுமை பறிமுதல்: லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலிருந்து, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில், சோழவரம் போலீஸார், தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் செங்குன்றம், நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த ஆந்திரமாநில பதிவு எண் கொண்டலாரியில் சோதனை நடத்தியதில், செங்குன்றம் அருகே உள்ள எல்லையம்மன் பேட்டையிலிருந்து, 30 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, லாரியின் ஓட்டுநரான வீச்சூரை சேர்ந்த செந்தமிழ்(37) என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எல்லையம்மன்பேட்டையில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு 12.5 டன்ரேஷன் அரிசி, 7.5 டன் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியில் கடத்த முயன்ற, சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 42.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 7.5 டன் கோதுமையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணை

இது தொடர்பாக, லாரி ஓட்டுநர் செந்தமிழ், சேமிப்புக் கிடங்கு ஊழியர்களான, பொன்னேரி, மேட்டுக்காலனியை சேர்ந்த சுகுமார்(23), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(25) ஆகிய 3 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி,கோதுமை மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரைச் சோழவரம் போலீஸார், திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in