

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கிணறு வெட்ட உரிமம் இல்லாமல் ஜெலட்டின் குச்சி மற்றும் டெட்டனேட்டர் கொண்டு சென்ற தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று அதிகாலை ஆலங்காயம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளியைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (45) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அவரிடம் பெரிய கைப்பை ஒன்று இருந்தது. இதையடுத்து, அவரை மடக்கிய தேர்தல் பறக்கும்படையினர் அவரிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் 103 ஜெலட்டின்குச்சி, டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஆலங்காயம் காவல் துறையினருக்கு தேர்தல் பறக்கும் படையினர் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த காவல் துறையினர் ராஜேந்திரனை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் கிணறு வெட்ட ஜெலட்டின்குச்சி, டெட்டனேட்டர்களை எடுத்துச்சென்றதும், அதற்கான உரிமம் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும், வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, இதில் தொடர்புடைய நபர்கள் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.