பணத்துக்காக மருத்துவர் மகன் கடத்தல்; 4 இளைஞர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

பணத்துக்காக மருத்துவர் மகன் கடத்தல்; 4 இளைஞர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

திருப்பூரில் பணத்துக்காக மருத்துவர் மகனைக் கடத்திய 4 இளைஞர்களுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூரை சேர்ந்தவர் செந்தில்குமார். மருத்துவர். இவருடைய 5 வயது மகன் லட்சுமி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பள்ளிக்குச் சென்றபோது, சிறுவனை ஒரு கும்பல் பணத்துக்காக காரில் கடத்தியது.

இது குறித்து மருத்துவர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் செந்தில்குமாரின் மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தேவராஜ்(25), அவருக்கு துணையாக இருந்த அதே ஊரை சேர்ந்தபிரபு(24), ஈஸ்வரன்(23), பிரபாகரன்(26) ஆகிய 4 பேரை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார். அதில், சிறுவனை பணத்துக்காக கடத்திய 4 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜரானார். இதையடுத்து 4 பேரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in