Published : 18 Jan 2022 11:01 AM
Last Updated : 18 Jan 2022 11:01 AM

புதுச்சேரியில் பொதுவழியை மறித்து - தடுப்புச்சுவர் கட்ட பாஜக எம்எல்ஏ பூமிபூஜை: அதிகாரிகள் உத்தரவின்பேரில் தடுப்புகள் அகற்றம்

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரின் பின்புறம் மொட்டைதோப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகாலமாக சுதந்திர பொன்விழா நகரின் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், சிலரது தூண்டுதலின்பேரில் மொட்டைதோப்பு பகுதி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொதுவழியை தடுத்து மதில் சுவர் எழுப்புவதற்கு அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் பொதுவழியை தடுத்து தீண்டாமை சுவர் போல் எழுப்புவதை உடனே கைவிட வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் பேரணியாக சென்று புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் மொட்டைதோப்பு பகுதியில் தடுப்புச்சுவர் எழுப்புவதற்கான பூமிபூஜையில் கலந்துகொள்ள ஜான்குமார் எம்எல்ஏ நேற்று வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து எம்எல்ஏ முன்னிலையில் பூஜை போடப்பட்டு, தடுப்புகள் கட்டப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. பின்னர் ஜான்குமார் எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டார்.

தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலர் ராஜாங்கம், உழவர்கரை செயலர் ராம்ஜி, தீண்டாமை ஒழிப்பு நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், கொளஞ்சியப்பன், குப்புசாமி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து, பொதுப்பாதையில் எப்படி தடுப்பு ஏற்படுத்த முடியும்? என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து ஆட்சியர் வல்லவனிடம் சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட துணை ஆட்சியர் கந்தசாமி இரு தரப்பினரிடம் விசாரித்து, அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு தடை விதித்தார். பாதையை மறைத்து வைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை அகற்றவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x