Published : 10 Jan 2022 11:46 AM
Last Updated : 10 Jan 2022 11:46 AM

கரோனா அச்சத்தால் விஷம் குடித்த குடும்பம் தாய், 4 வயது மகன் உயிரிழப்பு: மதுரையில் 2 பேருக்கு சிகிச்சை

மதுரை: மதுரை சிலைமான் அருகே கல்மேடு பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் லட்சுமி (46). இவரது கணவர் நாகராஜ். இவர் உடல்நலக் குறைவால் அண்மையில் இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் சிபிராஜ் (14), ஆதி (17), மகள் ஜோதிகா (24), இவரது மகன் ரித்தீஸ் (4). ஜோதிகா கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த இவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் ஜன.7-ம் தேதி தெரிவித்தனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் ஜோதிகா, ரித்தீஸ், லட்சுமி, இவரது மகன் சிபிராஜ் ஆகியோர் வீட்டில் மயங்கிக் கிடப்பதாக சிலைமான் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஜோதி, அவரது மகன் ரித்தீஸ் உயிரிழந்தது தெரியவந்தது.

லட்சுமி, சிபிராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக போலீஸார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சாணி பவுடரை கலந்து குடித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஜோதிகா கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் வசித்துள்ளார். தந்தையும் இறந்ததால் ஜோதிகா மட்டும் வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். ஜோதிகாவுக்கு கரோனா பாதிப்பால் குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லை என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் இரவு லட்சுமி குடும்பத்தினர் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மற்றொரு மகன் ஆதி வெளியில் சென்றிருந்ததால் தப்பித்தார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x