

சிறுமுகையில் மத்திய அரசு அதிகாரி எனக் கூறி துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை தியேட்டர் மேடு சாலையில் துணிக்கடை வைத்து நடத்தி வருபவர் நாகராஜ். இவர் சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “கடந்த மாதம் 21-ம் தேதி மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த நபர் ஒருவர், தனது பெயர் ராஜ்குமார் என்றும், தன்னை மத்திய அரசு அதிகாரி எனக் கூறிக்கொண்டும், கடையின் விற்பனை ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை உரிய முறையில் காட்ட வேண்டும் என்றார்.
பிறகு சிறிது நேரம் கழித்து, மத்திய அரசின் பெயரிலான கடித புத்தகத்தைக் காட்டி, ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையெனில் கடையைப் பூட்டி சீல் வைத்து விடுவேன் எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், துணிக்கடைக்கு சென்று மிரட்டல் விடுத்தவர் சிறுமுகை அருகே கிச்சகத்தியூர் கிராமத்தில் ஆசிரமம் வைத்து நடத்திவரும் சாமியார் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.