மதுராந்தகம்: தனியார் நிதி நிறுவனம் துன்புறுத்தியதா? - நண்பரின் கடனுக்கு ஜாமின் கையெழுத்திட்ட விவசாயி மன உளைச்சலில் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

மதுராந்தகம்: தனியார் நிதி நிறுவனம் துன்புறுத்தியதா? - நண்பரின் கடனுக்கு ஜாமின் கையெழுத்திட்ட விவசாயி மன உளைச்சலில் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
Updated on
1 min read

மதுராந்தகம்: நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்திட்ட விவசாயியை பணம் செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனம் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், மன உளைச்சலில் மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி நீலமேகம்(62). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதன்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு அச்சிறுப்பாக்கத்தில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பைனான்ஸ் மூலம் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகிய வாகனங்களை மாதத் தவணையில் ரவி வாங்கியுள்ளார்.

இதற்காக, ரவிக்கு இந்த நிறுவனத்தில் நீலமேகம் ஜாமீன் கையெழுத்திட்டுள்ளார். கரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு ரவியின் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால், மாதத் தவணை சரியாக கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் மாதத் தவணை கட்டாததால் ரவியின் வாகனங்களை சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், ஜாமீன் கையெழுத்திட்ட நீலமேகத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், வட்டி தொகைக்கு ஈடாகிவிட்டதாகவும். முழுப்பணத்தை செலுத்தாவிட்டால், சொத்துகளை பறிமுதல் செய்வோம் எனவும் மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, நீலமேகம் தனது சொத்துகளை விற்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதில், ஆன்லைன் மூலம் நிதி நிறுவனத்தினர் சொத்தில் வில்லங்கம் ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் நிதி நிறுவன ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், முறையான பதில் அளிக்காததால் செய்வதறியாமல் நீலமேகம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நிதி நிறுவன ஊழியர்கள் தொலைபேசி மூலம் நீலமேகத்தை தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை உறுவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நீலமேகம் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் துன்புறுத்தலே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து, இறந்த நீலமேகத்தின் உடலை நிதி நிறுவன அலுவலகம் முன்பு வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முழுக்கமிட்டனர். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸார், அப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் உறுதியளித்தனர்.

மேலும், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in