வரதட்சணைப் புகாரில் ஈரோடு அரசு மருத்துவர் கைது

வரதட்சணைப் புகாரில் ஈரோடு அரசு மருத்துவர் கைது
Updated on
1 min read

வரதட்சணைப் புகாரின் பேரில் ஈரோட்டில் அரசு மருத்துவரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா சரோனா (35). ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இடையன்கோடு பகுதியைச் சேர்ந்த அனூப் (36) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அனூப் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

திவ்யா சரோனாவின் திருமணத்தின் போது 117 பவுன் நகை, ரூ.32 லட்சத்தை அவரது பெற்றோர் சீர்வரிசையாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அனூப், மனைவியிடம் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அனூப்புக்கும், வேறொரு பெண் மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், திவ்யா சரோனாவுக்கு வழங்கப்பட்ட 117 பவுன் நகை மற்றும் ரூ.32 லட்சத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் திவ்யா சரோனா ஈரோடு தாலுகா போலீஸில் புகார் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின்பேரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸார், மருத்துவர் அனூப் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் அவரைக் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அனூப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in