

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இன்று காலை கருப்பத்தூரில் உள்ள அவரது தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரவுடி கோபால் (51). இவர் மீது கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கருப்பத்தூரில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று (அக். 6-ம் தேதி) அதிகாலை வெட்டப்பட்ட நிலையில் கோபால் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கோபாலின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.