

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மது போதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலீல் (45). இவர் பாக்குமட்டை தட்டு உள்ளிட்ட பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மனைவி ஜெரீனா (40). இவர் சுற்றுலாப் பயணிகளுக்கு மீன் வறுவல், சமையல் போன்றவற்றை தயார் செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
கலீலுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று (அக். 04) இரவும் கலீல் மது போதையுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறின்போது வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி ஜெரீனாவை கலீல் வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸார் கலீலை கைது செய்தனர்.