

போக்சோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (59). முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 2016ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 6 வயது சிறுமி இருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடராஜனை தேடி வந்தனர். இதனையடுத்து, நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவில் நடராஜனுக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.