Last Updated : 05 May, 2021 04:19 PM

 

Published : 05 May 2021 04:19 PM
Last Updated : 05 May 2021 04:19 PM

மகளைக் கொல்லத் துணிந்ததால் காதலியைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கறிஞர்; மதுரை திருமங்கலத்தில் உடல் தோண்டி எடுப்பு

ஹரிகிருஷ்ணன்

மதுரை

தனது மகளைக் கொல்லத் துணிந்ததால் ஆத்திரமடைந்ததால் வழக்கறிஞர், காதலியைக் கொன்று வீட்டுக்குள் புதைத்ததை அடுத்து, மதுரை திருமங்கலத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

மதுரை திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் (46). சிலம்பம் கற்று கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்தார். வீட்டிலேயே சிறுவர், சிறுமியர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. மதுரை முனிச் சாலையைச் சேர்ந்தவர். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு ஹரிபிரியா என்ற 11 வயது மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன் கணவர், மகளைப் பிரிந்து, விஜயலட்சுமி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மேலும் சிலம்பம் பயிலும் சிறுவர்களுக்கு யோகா கற்றுத்தரத் திட்டமிட்ட ஹரிகிருஷ்ணன், 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்ரா தேவி (35) என்ற யோகா ஆசிரியை நியமித்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே திருமணம் ஆன அவரைத் திருமணம் செய்யும் அளவுக்கு சித்ரா தேவி மாறினார். இதற்கிடையில் ஹரிபிரியாவைக் கவனிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

இந்நிலையில், மே 1-ம் தேதி சித்ரா தேவி திடீரென மாயமானதாக அவரது தந்தை கண்ணையா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அவரைத் தேடிய நிலையில் நேற்று காலையில் ஹரிகிருஷ்ணன் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீஸா் உடலை மீட்டு விசாரித்தனர்.

அவரது வீட்டில் சிக்கிய கடிதத்தில் , ‘‘எனது மனைவி பிரிந்த நிலையில், குழந்தைக்காக சித்ரா தேவியுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்டேன். தொடக்கத்தில் எனது மகளை நன்றாகக் கவனித்த அவர், நாளடைவில் சரியாகக் கவனிக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை எழுந்தது.

இருப்பினும், ஒரு கட்டத்தில் எனது மகளை அவர் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தார். வேறு வழியின்றி அவரைக் கொன்றேன். வெளியில் தெரிந்துவிடும் என்பதால் வீட்டுக்குள் உடலைப் புதைத்தேன். இதற்கு மேல் எனக்கு வேறு வழி தெரியவில்லை. நானும் தற்கொலை செய்கிறேன்’’ என்று அவர் குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர் .

கடிதத்தில் கூறியபடி, அவரது வீட்டுக் குளியலறையைத் தோண்ட காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் நடவடிக்கை எடுத்தார். திருமங்கலம் வட்டாட்சியர் (பொறுப்பு) திருமலை முன்னிலையில் இன்று காலை சித்ரா தேவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்தால் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் நடராஜன் தலைமையிலான குழு, சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதன்பிறகு உடலை சித்ரா தேவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காதலியைக் கொன்று புதைத்து, வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் 2வது நாளாகத் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x