சுரண்டை ஜவுளிக்கடையில் தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் சேதம்

சுரண்டை ஜவுளிக்கடையில் தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் சேதம்

Published on

தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள சங்கரன்கோவில் சாலையில் அண்ணா சிலை அருகில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. 3 தளங்களைக் கொண்ட இந்த கடையை செங்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஜவுளிக்கடையில் இருந்து புகை வருவதை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து சுரண்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். தீ வேகமாக பரவியதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடினர். 6 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில், கடையில் இருந்த துணிகள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சுரண்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சுரண்டை பகுதி இருளில் மூழ்கியது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in