Last Updated : 12 Mar, 2021 06:29 PM

 

Published : 12 Mar 2021 06:29 PM
Last Updated : 12 Mar 2021 06:29 PM

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் உயிரிழப்பு; மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் நரையூர் தனசிங்குபாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த ஓம்பிரணவமூர்த்தி - பவுனாம்பாள் தம்பதியின் கடைசி மகள் சிவபாக்கியம் (22). பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளார். இவருக்கும், புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகர் முதல் குறுக்குத் தெருவை சேர்ந்த தனியார் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் ஏழுமலை (எ) ராஜேஷுக்கும் (28) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின் சிவபாக்கியம் தனது கணவருடன் புதுசாரத்தில் தங்கியிருந்த நிலையில், சிவபாக்கியத்தின் தந்தை இறந்துவிட்டார். இதற்கும் ராஜேஷ் குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிவபாக்கியத்திடம் ஏழுமலை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சிவபாக்கியம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதே போல, இருதினங்களுக்கு முன்பும் சிவபாக்கியம், உறவினரிடம் தெரிவித்ததாகக் தெரிகிறது. இந்நிலையில், நேற்று (மார்ச் 11) திடீரென சிவபாக்கியம் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்ட உறவினர்கள் ஜிப்மருக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இது குறித்து, சிவபாக்கியத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து புதுச்சேரிக்கு வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிவபாக்கியத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஏழுமலை வீட்டார் வரதட்சணை கொடுமை செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி, சிவபாக்கியத்தின் உடலை வாங்க மறுத்து இன்று (மார்ச் 12) டிநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் டி.நகர் காவல்நிலைய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீஸார் இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x