மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கல்லூரி மாணவர் தற்கொலை: சாப்டூர் பகுதியில் பரபரப்பு 

மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கல்லூரி மாணவர் தற்கொலை: சாப்டூர் பகுதியில் பரபரப்பு 
Updated on
1 min read

பேரையூர் அருகே அண்ணன் திருமணம் விவகாரம் தொடர்பான புகார் குறித்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன்கள் இதயக்கனி (25), ரமேஷ் (20). கன்னியாகுமரி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரமேஷ் மூன்றாமாண்டு படித்தார். ஓரிரு தினத்துக்கு முன்பு இதயக்கனி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாப்டூர் காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் இதயக்கனியின் திருமணம் தொடர்பாக ரமேசை போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இன்று காலை 8.30 மணிக்குள் காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என, ஏற்கெனவே தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் அணைக்கரைப்பட்டி அருகிலுள்ள பெருமாள்கொட்டம் என்ற மலையிலுள்ள மரம் ஒன்றில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் இன்று காலை 8 மணிக்கு போலீஸாருக்குத் தெரிந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், மாணவர் ரமேஷின் உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்தாரா அல்லது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் சாப்டூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அண்ணன் விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு அழைத்த நிலையில், தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாப்டூர், பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘ ரமேஷ் அண்ணன் விவகாரம் தொடர்பாக விசாரிக்க ரமேசை வரவழைத்தோம். அவர் தற்கொலை செய்த விவரம் இன்று காலை தெரிந்தது. தற்கொலைக் கான காரணம் குறித்து விசாரிக்கிறோம். அவர் எப்போது இறந்தார் எனத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனையில் தெரியும் ,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in