Last Updated : 16 Jun, 2020 01:43 PM

 

Published : 16 Jun 2020 01:43 PM
Last Updated : 16 Jun 2020 01:43 PM

ரூ.3 கோடி விவகாரம்: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு; தமிழக டிஎஸ்பி புதுச்சேரி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

டிஎஸ்பி கண்ணபிரான் - முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம்

புதுச்சேரி

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் தமிழக டிஎஸ்பி ஆஜரானார்.

புதுச்சேரி அரியூரைச் சேர்ந்தவர் கண்ணபிரான். மயிலத்தில் உள்ள தமிழக போலீஸ் பயிற்சிப் பள்ளியில் டிஎஸ்பியாக உள்ளார். இவரது மைத்துனர் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம். இவர்கள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வது வழக்கம்.

ஒரு கட்டத்தில் தான் கொடுத்த ரூ.3 கோடியை திரும்பத் தருமாறு கண்ணபிரானிடம் கல்யாணசுந்தரம் கேட்டதாக கூறப்படுகிறது. கடந்த 6-ம் தேதி அரியூரில் உள்ள கண்ணபிரான் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்து. இதுபற்றி வில்லியனூர் காவல்நிலையத்தில் கண்ணபிரான் புகார் தந்தார். அவரது புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், அவரது மனைவி, உதவியாளர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தற்போது புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. ராஜசேகர வல்லாட், காவல் ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சூழலில் சிபிசிஐடி அலுவலகத்தில் கண்ணபிரான் இன்று (ஜூன் 16) ஆஜரானார். ரூ.3 கோடி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, தற்போது அந்தப் பணத்தின் நிலை என்ன என்பது உள்ளிட்டவை பற்றி அவரிடம் விசாரித்தனர்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தற்போது நில விற்பனைத் தொழிலில் உள்ளார். காரைக்காலில் 100 ஏக்கர் நிலம் வாங்கத் திட்டமிட்டு முன்பணம் தந்துள்ளார். நிலம் வாங்க ரூ.3 கோடி வாங்க சென்னையிலுள்ள பைனான்சியர் தருவதாகத் தெரிவித்தவுடன் சென்னைக்குச் சென்றுள்ளார். அப்போது பணத்தை எடுத்து வர தனது உறவினர் கண்ணபிரானையும் அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அப்பண விவகாரமே தற்போது வழக்காகியுள்ளது.

பணத்தைத் தந்தது யார் எனத் தொடங்கி, பணம் எங்கிருக்கிறது என்பது வரை முழு விசாரணை நடக்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரமும், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தந்துள்ளார். தொடர் விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும்" என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x