மதுரையில் இளம் பெண் கொலை: வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் துணிகரம்

மதுரையில் இளம் பெண் கொலை: வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் துணிகரம்
Updated on
1 min read

மதுரையில் இன்று (ஜன.8) அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணை மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாநகரின் பிரதான பகுதிகளில் ஒன்று தல்லாகுளம். தல்லாகுளம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் வசிக்கிறார் குமரகுரு பாரதி. இவரது மனைவி லாவண்யா. இவர்களுடன் குமரகுருவின் தாயார் ருக்குவும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 மர்ம நபர்கள் குமரகுருவின் வீடினுள் நுழைந்து லாவண்யாவை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனைத் தடுக்கவந்த லாவண்யாவின் மாமியார் சீனியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர் தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் வீடு புகுந்து மர்ம நபர்கள் செய்த இந்தக் கொடூர கொலை அப்பகுதி வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது லாவண்யாவின் கணவர் குமரகுரு வீட்டின் தரைத்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in