காரைக்குடியில் பச்சிளங் குழந்தையை புதரில் வீசிய தாயாரிடம் விசாரணை

காரைக்குடியில் பச்சிளங் குழந்தையை புதரில் வீசிய தாயாரிடம் விசாரணை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையை புதரில் வீசி சென்ற தாயாரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி அருகே அரியக்குடி பழனிச்சாமி நகர் முதல் வீதியில் முட்புதரில் அதிகாலை 4 மணிக்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் பெண்குழந்தை எறும்புகள் மொய்த்தப்படி கிடந்தது.

குழந்தையை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையில் அதேபகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் வீட்டில் குழந்தை பிறந்ததாகவும், ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அதிகாலையில் வந்தார். ஆனால் அவர் குழந்தையை எடுத்து வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்களும், போலீஸாரும் அவரிடம் விசாரித்தபோது தனக்கு பிறந்த குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு மருத்துவமனைக்கு வந்தது தெரியவந்தது.

மேலும் சரஸ்வதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in