

தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று அதிகாலை ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்துக்குளானது. இதில் வாகனத்தில் பயணித்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் வாகனங்களுக்கு கட்டமைப்புப் பணி (ஆட்டோ பாடி பில்டிங்) செய்பவர். இவரது மகள் வர்ஷா(8) மற்றும் கார்த்திக்கின் நண்பர்கள் பூபாலன், பழனி உட்பட சிலர் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
காரை வேலூரைச் சேர்ந்த சீனிவாசன் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இவர்கள் வந்த கார் கம்பம் பிரதான சாலை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தில் மோதியது.
இதில் தந்தையின் மடியில் அமர்ந்து வந்த சிறுமி வர்ஷா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
கம்பம் தெற்கு போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் சீனிவாசன் தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ஓட்டுநரை கைது செய்த போலீஸார் இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.