காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை; தண்டவாளத்தில் உடல் வீச்சு: நெல்லையில் கொடூரம்

காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை; தண்டவாளத்தில் உடல் வீச்சு: நெல்லையில் கொடூரம்
Updated on
1 min read

நெல்லையில் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் படுகொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அருணாசலம் என்பவரது மகன் நம்பிராஜன் (21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகள் வான்மதியை காதலித்துள்ளார். இதற்கு வான்மதியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த 2 மாதத்துக்கு முன்பு விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

திருநெல்வேலி டவுன், வயல் தெருவில் வாடகை வீட்டில் நம்பிராஜனும், வான்மதியும் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த நம்பிராஜனை மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துப்பாண்டி என்பவர் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் நம்பிராஜன் திரும்பி வராததால், இதுகுறித்து திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் வான்மதி புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் தேடிச் சென்றனர். அப்போது, குறுக்குத்துறை பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் நம்பிராஜன் சடலமாகக் கிடந்தார்.

இதையடுத்து, காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலம், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால், நம்பிராஜனை அவரது நண்பர் மூலம் ஏமாற்றி வரவழைத்து வான்மதியின் குடும்பத்தினர் கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in