நாமக்கல்லில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டிக் கொலை: கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை

நாமக்கல்லில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டிக் கொலை: கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை
Updated on
1 min read

நாமக்கல்

நாமக்கல்லில் இரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று கணவன், மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி விமல்ராஜ் (22). இவர் நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. காமராஜர் நகரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி அனிதாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைத்தடுக்க முற்பட்ட அனிதாவின் தந்தை கருப்புசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் விமல்ராஜ், அனிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கருப்புசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே, கொலையாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்.பி. அர.அருளரசு உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அனிதாவின் அண்ணன் அருணுக்கும், சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in