Published : 11 Oct 2019 11:17 AM
Last Updated : 11 Oct 2019 11:17 AM

அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதல்: பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் மீது ஆயுதத் தடைச் சட்டம் பாய்ந்தது

சென்னை

அண்ணாசாலை அருகே நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் இரு கும்பல் நேற்று மோதிக்கொண்ட சம்பவத்தில் பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி உள்ளிட்டோர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை- ஆதித்தனார் சாலை இணைப்புச் சாலையான பிளாக்கர்ஸ் சாலை கேசினோ திரையரங்கம் அருகில் ஆட்டோவில் வந்துகொண்டிருந்த பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி, அவரது மகன் அழகுராஜா, கூட்டாளிகள் விஜயகுமார், கௌதம், மணிகண்டன் ஆகியோரை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து வெட்டியது.

இதில் அழகுராஜாவுக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. அவரது தாயார் வழக்கறிஞர் மலர்க்கொடிக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தாக்குதலின்போது அழகுராஜா தான் வந்த ஆட்டோவில் இருந்து நாட்டு வெடிகுண்டு ஒன்றை எடுத்து வீசினார். பலத்த சத்தத்துடன் அது தரையில் விழுந்து வெடித்தது.

இதனால் வெட்ட வந்த கும்பல் தப்பி ஓடியது. வெடிகுண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீன அதிபர் வரும் நேரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நேரத்தில் சென்னையின் பிரதான பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரிய அளவில் எதிரொலித்தது.

காயம்பட்ட அழகுராஜா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐஸ் ஹவுஸில் வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலைக்கு, பழிக்குப் பழி வாங்கும்விதமாக நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.

இதுவரை யாரும் பிடிபடவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனிடையே வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்தனர். அதேபோன்று ஆட்டோவில் வெடிக்காமல் இருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டையும் கைப்பற்றினர்.

வெடிகுண்டு வைத்திருந்தது, வீசியது போன்ற காரணங்களுக்காக மலர்க்கொடி, அழகுராஜா, கௌதமன், விஜயகுமார், மணிகண்டன் உள்ளிட்டோர்மீது சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் ஐபிசி பிரிவு 147 (கலகம் செய்யும் விதத்தில் சட்டவிரோதமாகச் செயல்படுதல்),148 (கலகம் செய்யும் விதத்தில் சட்டவிரோதக் கூட்டத்தில் பயங்கர ஆயுதங்கள், உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருத்தல்), 7(a) r/w 25(1-A)1989 (வெடிக்கும் விதமான ஆயுதங்களை வைத்திருத்தல்), arms act and 3(a) explosive substances act 1908 (ஆயுதத் தடைச் சட்டம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் அழகுராஜா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வழக்கறிஞர் மலர்க்கொடி, மணிகண்டன், விஜயகுமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x