கைது செய்யப்பட்ட சோழன்
கைது செய்யப்பட்ட சோழன்

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக வணிகப்பிரிவு தலைவர் கைது

Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸை சேர்ந்த சந்திரசேகர் வெடிகுண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக வணிக பிரிவு தலைவர் சோழனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். அவரது மனைவி கண் முன்பு இச்சம்பவம் நடைபெற்றது. சந்திரசேகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஷாஜகான் சென்றபோது, அவரை சந்திரசேகர் தரப்பினர் அனுமதிக்கவே இல்லை. கடும் எதிர்ப்பால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

காலாப்பட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் டெண்டர் பணிகள் உட்பட தனது ஆளுமையை நிலைநிறுத்த ஏற்பட்ட போட்டியால் தொடர் கொலைகள் நிகழத் தொடங்கியதே அனைத்துத் தரப்பும் வைக்கும் தகவலாக உள்ளது.

புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்ட இக்கொலை வழக்கில் மறுநாளே சுகன், ரங்கராஜ், அப்துல் நசீம் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அதைத்தொடர்ந்து போலீஸார் விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் வாக்கு மூலம் அளித்த குற்றவாளிகள் பாஜக வணிக பிரிவு தலைவர் சோழன் என்பவர் கொலை செய்யக் கூறியதாகவும் அதற்காக பணம் தருவதாக தெரிவித்தாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக வணிக பிரிவு தலைவர் சோழன் என்பவரை காலாப்பட்டு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in