Published : 14 Sep 2019 02:57 PM
Last Updated : 14 Sep 2019 02:57 PM

‘ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை’ சிபிஐ டிஐஜிக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற உள்துறை அதிகாரி உட்பட 3 பேர் கைது

டெல்லி

சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றபோது அவரது புகாரின்பேரில் சென்னை கட்டுமான நிறுவன நிர்வாகி, உள்துறை அமைச்சக அதிகாரி உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

2004-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க். இவர் நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவர். 2004-ம் ஆண்டு திருப்பத்தூர் எஸ்.பியாக காவற்பணியை தொடங்கியவர் பின்னர் வேலூர் எஸ்பியாக பணியாற்றியுள்ளார்.

2008-ம் ஆண்டு நெல்லை ரூரல் எஸ்பியாக நியமிக்கப்பட்ட அஸ்ரா கார்க் தீண்டாமை, கந்துவட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். 2010-ம் ஆண்டு மதுரை எஸ்.பியாக இருந்தபோது இவர் ஆற்றிய பணியால் புகழ்பெற்றார். தேர்தல் நேரத்தில் இவர் ஆறிய பணியால் தேர்தல் ஆணையம் மற்றும் மீடியாக்களால் பாராட்டப்பட்டார்.

2013-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். அங்கு உறுப்புத்தான மோசடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். 2016-ம் ஆண்டு அயல் பணியில் டெல்லி சிபிஐ அதிகாரியாக சென்றார். அங்கு பணியிலிருக்கும்போதே டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

தற்போது சிபிஐ டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஒரு போன் கால் சமீபத்தில் வந்துள்ளது.அதில் பேசிய நபர் தன்னை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியுள்ளார்.

சோமா கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் தினேஷ் சந்த் குப்தா என்ற தரகர் தன்னை அணுகியதாகவும் கட்டுமான நிறுவன வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அதை முடித்துக்கொடுத்தால் ரூ.2 கோடி லஞ்சம் தருவதாக பேசியுள்ளார்.

அஸ்ரா கார்க் இதைக்கேட்டு அவர்களை கையுங்களவுமாக பிடிக்க முடிவெடுத்தார். சோமா கட்டுமான நிறுவனத்தின் வழக்கு அஸ்ரா கார்க் விசாரிக்கவில்லை, ஆனால் ஒளியத்தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக டிஐஜி அஸ்ரா கார்க் மூலம் இந்த பிரச்சினையை முடிக்கலாம் என அந்த அதிகாரி அணுகியுள்ளார்.

இதையடுத்து சிபிஐ மேலதிகாரிகளிடம் அஸ்ரா கார்க் புகார் அளித்தார். தன்னிடம் உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங், புரோக்கர் தினேஷ் சந்த் குப்தா ஆகியோர் பேசிய டெலிபோன் பேச்சுக்களை ஆதாரமாக கொடுத்தார். இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன் டிஐஜி அஸ்ரா கார்க்கை அவர்கள் தொடர்பு கொண்டபோது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரச்சொன்னார். முன்னரே திட்டமிட்டப்படி இரவு 11 மணி அளவில் அஸ்ரா கார்க்கின் காரில் அவரது ஓட்டுநர், வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை அதிகாரியுடன் அங்குச் சென்றுள்ளனர்.

அங்கு வந்த உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங், புரோக்கர் தினேஷ் சந்த் குப்தா ஆகியோர் அஸ்ரா கார்க்கிடம் பேசியுள்ளனர். சோமா கட்டுமான நிறுவன உரிமையாளர்தான் பேசச்சொன்னாரா? என உறுதிப்படுத்த அவரிடம் பேச வேண்டும் என அஸ்ராகார்க் சொல்ல போன் போட்டு கொடுத்துள்ளனர்.

கட்டுமான நிறுவன உரிமையாளர் ராமச்சந்திர ராவ் அஸ்ரா கார்க்கிடம் பேசியுள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக ரூ.10 லட்சம் தருவதாகவும் நல்லபடியாக முடித்தால் மீதி பணத்தை தருவதாகவும் பேசியுள்ளனர். அவர்களை கையுங்களவுமாக சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து லஞ்சம் கொடுக்க வைத்திருந்த ரூ.10 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவையும் சிபிஐ கைது செய்தது.

சென்னை உள்ளிட்ட தென் மாநிலங்களில் செயல்படும் சோமா என்டர்பிரைசஸ் என்கிற கட்டுமான நிறுவனம் பலகோடி அளவிலான பெரிய காண்ட்ராக்டுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது.

புகார்தாரரான சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்க் சாமர்த்தியமாக அவர்கள் பேசியதை பதிவு செய்து புகாரும் அளித்து தானே நேரில் சென்று பிடித்தும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x