குடும்பத் தகராறில் கொடூரம்: பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் கண்ணெதிரில் ஆசிரியை குத்திக் கொலை; கணவன் கைது

குடும்பத் தகராறில் கொடூரம்: பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் கண்ணெதிரில் ஆசிரியை குத்திக் கொலை; கணவன் கைது
Updated on
1 min read

மதுரையில் குடும்பத் தகராறில் பிரிந்திருந்த மனைவியை, அவர் பணியாற்றிய பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் முன்னிலையில் குத்திக் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசிப்பவர் குரு முனீஸ்வரன்(39). சிவில் இன்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி ரதிதேவி (35). விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 மாத காலமாகப் பிரிந்து வாழ்ந்தனர்.

கணவனைப் பிரிந்து தனது இரட்டைக் குழந்தைகளுடன் ரதிதேவி சித்தனேந்தல் கிராமத்திலுள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு இருந்து திருமங்கலத்திலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். 

மனைவி பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் வசிப்பது குரு முனீஸ்வரனுக்கு கடும் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு முடிவுடன் இன்று மாலை 3.45 மணி அளவில்  மனைவி பணிபுரிந்த பள்ளிக் கூடத்துக்குச் சென்றுள்ளார். வாட்ச்மேனிடம் தனது மனைவி இதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார்.

நேராக ரதிதேவி பணியாற்றும் வகுப்பறைக்குச் சென்ற அவர் மனைவியை பேச வேண்டும் என வெளியே அழைத்துள்ளார். வெளியே மனைவியுடன் பேசும்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி ரதிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

மாணவர்கள் கண்ணெதிரே நடந்த இச்செயலால் அனைவரும் அதிர்ச்சியடைந்து ஓடினர். கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரதிதேவி உயிரிழந்தார். கத்தியுடன் தப்ப முயன்ற கணவர் குரு முனீஸ்வரனை அங்குள்ளவர்கள் மடக்கிப் பிடித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் குரு முனீஸ்வரனைக் கைது செய்தனர். ரதிதேவியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் கணவன் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவர்கள் கண்ணெதிரே ஆசிரியை கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in