2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 2 மூதாட்டிகளை கொன்று, நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று முக்கியத் தீர்ப்பு வழங்கியு்ள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள வளையப்பட்டி கைலாசபதி வீதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி வள்ளியம்மை (72). கருப்பையா மனைவி சரஸ்வதி (66). சகோதரிகளான இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு சரஸ்வதிக்கு சொந்தமான நிலம் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தப் பணத்தில் சரஸ்வதியின் நாத்தனார் நாகம்மை பங்கு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சரஸ்வதி மறுத்துள்ளார். இதுகுறித்து தனது உறவினர் தொட்டியம்பட்டியைச் சேர்ந்த வி.சென்னியப்பனிடம் (40) தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பணத்தை திருட சென்னியப்பன் ஏற்பாட்டின்படி, மேலூர் அருகே காமராஜ் நகரைச் சேர்ந்த ஏ.மணி என்ற குமார், கச்சிரான்பட்டி வி.அருண் பிரசாத், ஆர்.கணேசன், சேலம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த மணி என்ற டி.மணிகண்டன், ராஜபாளையம் சின்னான்பட்டியைச் சேர்ந்த ஆர்.யுவராஜ் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, 2014 அக்.16-ம் தேதி இரவு வள்ளியம்மை, சரஸ்வதி ஆகியோரை வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், ரூ.9.97 லட்சம், 6 கிராம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பொன்னமராவதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சென்னியப்பன், மணி என்ற குமார், அருண்பிரசாத், மணிகண்டன், யுவராஜ், கணேசன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி கனகராஜ் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சென்னியப்பன், குமார், அருண்பிரசாத், மணிகண்டன், யுவராஜ் ஆகிய 5 பேருக்கும் மூதாட்டிகளை கொலை செய்த குற்றத்துக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை, சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்கும், கூட்டுக்கொள்ளை அடித்த குற்றத்துக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், சென்னியப்பன் தவிர மற்றவர்களுக்கு இரவில் வீடு புகுந்த குற்றத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் கணேசன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார். வழக்கை முறையாக விசாரணை செய்த பொன்னமராவதி போலீஸாரை எஸ்.பி. அபிஷேக் குப்தா பாராட்டினார்.
