

திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டமாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஆரோன்பாஷா (52). அதிமுக கிளை செயலாளரான இவர் திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காடு பகுதியில் பழைய கதவுகள், ஜன்னல் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆரோன் பாஷா நேற்று முன் தினம் பகலில் ஈக்காடு பகுதியில் உள்ள கடையில் இருந்தபோது, அவரை மொபைல் போனில் அழைத்த மர்ம நபர், `பழைய பொருட்கள் வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கடைக்கு வந்த மர்ம நபர்கள், பொருட்களை பார்ப்பது போல் ஆரோன்பாஷாவை கடைக்குள் அழைத்துச் சென்று, பொருட்களின் விலை குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஆரோன்பாஷாவை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆரோன்பாஷா ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடுகளை இடித்து அதிலிருந்து ஜன்னல், கதவுகள் போன்ற பொருட்களை எடுத்து விற்பனை செய்வதில் ஆரோன்பாஷாவுக்கும் திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததும், அதன் காரணமாக ஆரோன்பாஷா அரிவாளால் வெட்டப்பட்டதும் புல்லரம்பாக்கம் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, ஆரோன் பாஷாவை அரிவாளால் வெட்டியது தொடர்பாக தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (26), விஜய் (30), சூரிய பிரகாஷ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.