

காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. எப்போது தங்கள் நிலம், வீடுகள் பிடுங்கப்படுமோ என்று பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்காமல் முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்த்து 4,791 ஏக்கர் பரப்பளவில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.
இந்தத் திட்டத்தால் 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டாலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் அழியும் நிலை உருவானதால் போராட்டம் தீவிரமானது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், இந்தப் பகுதியில் பரந்தூர் விமான நிலையம் அறிவிக்கப்பட்டதும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டது. நிலங்களின் மதிப்பு 10 மடங்கு வரை உயர்ந்தது.
பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும், பணக்காரர்களும் நிலங்களை வாங்கி குவித்தனர். தற்போது இத்திட்டத்தை தீவிரமாக எதிர்த்து வந்த த.வெ.க தலைவர் விஜய் வெற்றி பெற்று முதல்வரானதால், இந்தத் திட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் (முதலீட்டாளர்கள் மத்தியில்) உருவாகியுள்ளது.
இந்த விமான நிலையம் அறிவிக்கப்பட்டது முதல், ஆரம்பத்தில் இருந்தே இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தங்கள் கட்சி மாநாட்டில் இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, விவசாயிகளுக்கு ஆதரவாக தனது முதல் போராட்டத்தை பரந்தூர் அருகிலேயே நடத்தினார்.
இதனால் இந்தத் திட்டம் இனி வேகம் எடுக்குமா? அல்லது கிடப்பில் போடப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறும்போது, “விமான நிலைய ஓடுதளம் அமையவுள்ள பகுதி நீர்நிலைகளை உள்ளடக்கியது.
த.வெ.க தலைவர் விஜய் முதல்வராகியுள்ளதால் இத்திட்டத்தை எளிதாக ரத்து செய்ய முடியும். இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கையை எடுக்காமல் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வேறு மாற்று இடங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால், இங்கு நீர்நிலைகளில் தேங்க வேண்டிய உபரிநீர் அனைத்தும் சென்னைக்குள்தான் செல்லும்.
எனவே, இத்திட்டத்தை ரத்து செய்வது சென்னை மக்களுக்கும், விஜய்க்கு முழுமையாக ஆதரவளித்த சென்னை வாக்காளர்களுக்கும் கூட மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்” என்றார்.