

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது,கேரள மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்த அவரது உடைமைகளை சோதனை செய்த போது, ரூ.1 கோடி மதிப்புள்ள 900 கிராம் உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி, தாய்லாந்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த லயன் ஏர்வேஸ் விமானத்தில் இருக்கும் பயணிகளை தீவிர சோதனை செய்ய முடிவு செய்தனர்.
அந்த விமானம் சென்னை வந்ததும், பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரூ.1 கோடி மதிப்புள்ள 900 கிராம் உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் கடத்தல் குருவிகளாக செயல்பட்டது தெரியவந்தது.