

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ‘நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நீலாங்கரை போலீஸார், வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பிறகும் சந்தேகப்படும்படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.
எனவே, புரளியைக் கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சீமான் வீட்டுக்கு கடந்த மாதமும் இதேபோல், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடிகை த்ரிஷா, இயக்குநர் மணிரத்தினம் வீடு உள்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை சைபர் க்ரைம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.