

மதுரை: தாய்லாந்தில் வாங்கி இலங்கை வழியாக மதுரைக்கு கடத்திய ரூ.8 கோடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருட்களை மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
இலங்கை கொழும்புவில் இருந்து நேற்று மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த விமானத்தில் கொழும்பு - மதுரை வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். தஞ்சை முகமது மைதீன் (26), சென்னை சாகுல் ஹமீது (50) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களின் உடைமைகளும் தீவிர சோதனையிட்டபோது, 8 கிலோ உயர் ரக போதைப்பொருளை மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் 8 கிலோ உயர் ரக போதைப்பொருளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
தாய்லாந்தில் போதைப்பொருளை வாங்கி இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தியதும் தெரிந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி என்றும், மதுரை விமான நிலையத்தில் இவ்வளவு மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது இதுவே முதன்முறை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.