

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் அரசன் (22). இவருக்கும் மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த எம்ஜிஆர் சட்டக் கல்லூரி மாணவர் நவீன் குமார் (23) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதில் அரசனை, நவீன்குமார், அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அரசன் தனது நண்பர் மாயஜோதி (21) என்பவரிடம் கூறியுள்ளார்.
நவீன் குமாரிடம் மாயஜோதி இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாயஜோதி மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், அஜித்குமார், ஆஷிக் மற்றும் ஜெஸ்டின் ஆகியோர் சேர்ந்து நவீன்குமார் வீட்டுக்கு சென்று மது போதையில் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த மோதலில் நவீன் குமாரின் நண்பர் சூர்யா (19) என்பவர் திடீரென பேப்பரால் செய்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் மாயஜோதியின் நண்பர், விக்னேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மதுரவாயல் போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று இரு தரப்பையும் சேர்ந்த மொத்தம் 10 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடிவருகின்றனர்.