

சென்னை: சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு 2-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் வீடு, சென்னையில் உள்ள பாமக அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
முதல்வர், அமைச்சர்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், நடிகர், நடிகைகள் வீடு, ஆளுநர் மாளிகை, விமான நிலையம், வெளிநாட்டு தூதரகங்கள் என பல்வேறு இடங்களுக்கு அண்மைக்காலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. போலீஸார் நடத்தும் சோதனைகளில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவருகிறது.
இந்நிலையில், டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு, சென்னை தி.நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் வீடு (இது பாமக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது), கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, அண்ணா சாலையில் உள்ள தர்கா, அமெரிக்க துணை தூதரகம் ஆகிய இடங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.
இதையடுத்து, போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சி.பி ராதாகிருஷ்ணன் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ராமதாஸ் வீடு, அன்புமணி வீடு உட்பட மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.