

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் தலைவராகப் பணியாற்றி, பின்னர் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவர் பேராசிரியர் எஸ்.கணேசன்.
தொலை உணர்வுத் துறையின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ். இவர்கள் இருவர் மீதும் 2 மாணவிகள் தனித்தனியாக பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அளித்திருந்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உள்ளக புகார் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், இருவரும் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களைப் பணி நீக்கம் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்ப கடந்த செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்று, இருவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கும் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கல்லூரிக் கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையே பேராசிரியர் கணேசன், தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என பட்டியலின தேசிய ஆணையத்துக்கு(என்சிஎஸ்சி) செப்.25-ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே, பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நிர்வாக ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆணைகளை, 2 பேராசிரியர்களும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும், இதேபோல பல்கலைக்கழகத்தில் 6 பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் உள்ளன என்றும், அவர்கள் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பேராசிரியர்கள் குழு என்ற பெயரில் பதிவாளர், கல்லூரி கல்வி ஆணையர், உயர்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்று பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான இடமாற்றம் போன்ற சிறிய தண்டனைகளே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்தக் கடுமையான நடவடிக்கை பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறியது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு கன்வீனராக, கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதுபோன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறார். தற்போது 2 மாணவிகள் புகார் அளித்த விவகாரத்தில், நடவடிக்கைக்கு உள்ளான பேராசிரியர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.