

சென்னை: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திரையரங்கில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் யூடியூப் சேனல்களை சேர்ந்த சிலர் பேட்டி எடுத்தனர். அப்போது கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாகவும் ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் தவெகவுக்கு ஆதரவாக பேசியதோடு, யூடியூபர்களை ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இதில், ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகர் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்த தவெக பிரமுகர் கோகுல் (29) என்பவரை கைது செய்தனர்.