வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரை சேர்ந்தவர் மீனாட்சி(42). கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். மீனாட்சி வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி வெளியே சென்றார்.
பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த இரண்டரை பவுன் நகைகள், ரூ.35,000 பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து, அதன் வழியாக மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருட்டில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த ஜீவா(20) மற்றும் 2 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து நகை, பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல், தரமணியில் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த டிவியை திருடி சென்ற பவித்ரன்(23), கோகுல்(23) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
