

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொறியியல் பட்டதாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பொறியியில் படித்து முடித்த மாணவர்கள் சிலர் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சூளைமேடு போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். குறிப்பாக சூளைமேடு, வீரபாண்டி நகர் முதல் தெரு சந்திப்பு அருகே நேற்று முன்தினம் கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப்பொருள் வைத்திருந்த சூளைமேட்டைச் சேர்ந்த ஜோ பாப்பிஸ்ட் (20), அதே பகுதி மோவின் லாரன்ஸ் (21) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அவர்களது நண்பர்களான ஈரோடு மாவட்டம் காசாபேட்டையைச் சேர்ந்த டென்னிஸ் டிசோசா (20), அதே மாவட்டததைச் சேர்ந்த ரெனித் (22) ஆகிய மேலும் இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிராம் மெத்தம்பெட்டமைன், 150 கிராம் கஞ்சா, 3 ஐ-போன்கள், மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் பொறியியல் படித்து முடித்துள்ளதும், சரியான வேலை கிடைக்காததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப் பொருள் கடத்தல் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.