

சென்னை: புழல் சிறையில் உள்ள தீவிரவாதி அபுபக்கர் சித்திக், மேலும் இரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக்கை, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஆந்திர மாநிலம், அன்னமயம் மாவட்டம், கடப்பா அருகே உள்ள ராயச்சோட்டில் 2 மாதங்களுக்கு முன்னர், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து லேப்-டாப் உட்பட ஏராளமான மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வீட்டில் சோதனை நடத்திய போது, வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரை சென்னை அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்தனர். சென்னை பழைய காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 5 இடங்களில் குண்டு வைத்தது என ஒன்றோடு ஒன்று தொடர்புடைய 7 வழக்குகளில் அபுபக்கர் சித்திக் சம்பந்தப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக, அவரிடம் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, 2012-ம் ஆண்டு பாஜக மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்த அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அபுபக்கர் சித்திக் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதுதொடர்பாகவும், காவலில் எடுத்து விசாரித்தனர். தொடர்ந்து, ஆந்திராவில் அவர் வசித்த வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சில முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையில், மதுரை திருமங்கலம் ஆலம்பட்டி பாலத்தின் கீழே பைப் வெடிகுண்டு வைத்தது, நாகை மாவட்ட இந்து முன்னணி தலைவரின் மனைவியை வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொலை செய்தது, பாஜக முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியது என மேலும் சில வழக்குகளிலும் சித்திக்குக்கு தொடர்பிருப்பது தொியவந்தது.இந்நிலையில், வேலூரில் கடந்த 2013-ம் ஆண்டு இந்து முன்னணி மாநில செயலாளராக இருந்த வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கு, அதே ஆண்டில், பாஜக மாநில செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு என இரண்டு கொலை வழக்குகளிலும், அபுபக்கர் சித்திக்கை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.