

சென்னை: சென்னை தி.நகரில் வசிப்பவர் பிரபல தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த செய்தியில், எங்களது வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்து நாங்கள் ஆலோசனை கூறும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய கிஷோர், அந்த வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க் (Link) மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தகம் செய்ய பல்வேறு வங்கிக் கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 26 லட்சம் பணம் அனுப்பி முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அவருக்கு லாபப் பணமும் கிடைக்கவில்லை; முதலீடு செய்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸாரிடம் கிஷோர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக மோசடி கும்பலின் கூட்டாளிகள் திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த சத்திய நாராயணன் (60), மணிவேல் (25), ரோஷன் (35), சிம்சேன் செல்லதுரை(26), ஆதனன் (27), அப்சர் சவுகான் ஆகிய 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கோயம்புத்தூர் மாவட்டம், திருவள்ளுவர் நகர், ஒண்டிப்புதூர் சாலை பகுதியைச் சேர்ந்த பூர்னேஷ் (26) என்பவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மோசடி பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.