

கோவை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சின்னகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி(22). இவர், கோவை மாவட்டம் அரசூரில் தங்கியிருந்து, வாகராயம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 30-ம் தேதி இரவு வேலை முடிந்த பின்னர், தங்கியிருக்கும் அறைக்கு இருசக்கர வாகனத்தில் மாசிலாமணி திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வாகராயம்பாளையம் - தென்னம்பாளையம் சாலையில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மாசிலாமணி இருசக்கர வாகனத்தை திருப்பினார். அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இதில் மாசிலாமணி படுகாயமடைந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாசிலாமணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.