

சென்னை: குவைத்தில் இருந்து 150 பயணிகள், 6 ஊழியர்களுடன் நேற்று சென்னைக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதிலிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சேக் முகமது (28) என்ற பயணி, அடிக்கடி விமானத்தின் கழிப்பறைக்கு சென்று புகைபிடித்து வந்தார். இதனை பார்த்த பயணிகள் அவர் புகைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், பயணிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக, விமான பணிப் பெண்கள் விமானியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானம் சென்னையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்த சேக் முகமதுவை இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.