

காஞ்சிபுரம்: பொன்னேரிக்கரை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் வசிப்பவர் பிரவீன் குமார். அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில், ஆண்டி சிறுவள்ளூரைச் சேர்ந்த செல்வி (38) என்பவர் கடந்த 3 நாட்களாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற செல்வி மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் அவரை தேடி அட்டைப் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றனர்.
தொழிற்சாலையில் சென்று பார்த்தபோது, அட்டைப் பெட்டிகள் தயாரித்து பின்பு பயனற்ற அட்டைகளை குவித்து வைக்கும் பகுதியில் செல்வி தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த, பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வியின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், செல்வி அணிந்திருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தாலி சரடு உள்ளிட்ட நகைகளும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அரசு பொது மருத்துவமனை எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் கோஷம் இட்டனர்.
இதையடுத்து, போலீஸார் மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் சமாததான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சுமார் ஒரு மணி ரயில்வே சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.