கள்ளக்குறிச்சி அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டு 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் என்பவர், குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தனது 2-வது மகளுக்கு பூப்பனித நீராட்டு விழா நடத்துவதற்காக கடந்த மாதம் கடுவனூர் திரும்பினார். வரும் 7-ம் தேதி விழா நடைபெறவிருந்த நிலையில், தனது பாஸ்போர்ட்டைபுதுப்பிப்பதற்காக நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.
வீட்டில் அவரது தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் ஆகியோர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் பின்பக்க கதவு வழியாக
நுழைந்த மர்ம நபர்கள், முனியன், பொன்னம்மாளை தாக்கி கட்டிப் போட்டு, தனி அறையில் அடைத்தனர். மேலும், மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர் வீடு திரும்பிய கேசரிவர்மன் இதுகுறித்து சங்கராபுரம் போலீஸில் புகார் செய்தார். காவல்ஆய்வாளர் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸார் கொள்ளை நடந்த வீட்டைப் பார்வையிட்டனர். சுமார் 200 பவுன் நகைகள் கொள்ளைபோனதாக புகார் அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார்வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
